புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (௮௱௪௰௧ - 841)
 

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது (௮௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. (௮௱௪௰௧)
—மு. வரதராசன்

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார். (௮௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது (௮௱௪௰௧)
—மு. கருணாநிதி

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (௮௱௪௰௨ - 842)
 

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை (௮௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். (௮௱௪௰௨)
—மு. வரதராசன்

அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே. (௮௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும் (௮௱௪௰௨)
—மு. கருணாநிதி

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.   (௮௱௪௰௩ - 843)
 

அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும் (௮௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். (௮௱௪௰௩)
—மு. வரதராசன்

அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது. (௮௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள் (௮௱௪௰௩)
—மு. கருணாநிதி

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (௮௱௪௰௪ - 844)
 

‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்! (௮௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும். (௮௱௪௰௪)
—மு. வரதராசன்

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும். (௮௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் (௮௱௪௰௪)
—மு. கருணாநிதி

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (௮௱௪௰௫ - 845)
 

தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும் (௮௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். (௮௱௪௰௫)
—மு. வரதராசன்

அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும். (௮௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும் (௮௱௪௰௫)
—மு. கருணாநிதி

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.   (௮௱௪௰௬ - 846)
 

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும் (௮௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். (௮௱௪௰௬)
—மு. வரதராசன்

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே. (௮௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும் (௮௱௪௰௬)
—மு. கருணாநிதி

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (௮௱௪௰௭ - 847)
 

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான் (௮௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். (௮௱௪௰௭)
—மு. வரதராசன்

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான். (௮௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள் (௮௱௪௰௭)
—மு. கருணாநிதி

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (௮௱௪௰௮ - 848)
 

அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான் (௮௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். (௮௱௪௰௮)
—மு. வரதராசன்

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே. (௮௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும் (௮௱௪௰௮)
—மு. கருணாநிதி

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (௮௱௪௰௯ - 849)
 

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான் (௮௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான். (௮௱௪௰௯)
—மு. வரதராசன்

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான். (௮௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான் (௮௱௪௰௯)
—மு. கருணாநிதி

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (௮௱௫௰ - 850)
 

உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான் (௮௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். (௮௱௫௰)
—மு. வரதராசன்

இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான். (௮௱௫௰)
—சாலமன் பாப்பையா

ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் (௮௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சிந்துபைரவி  |  தாளம்: ஆதி
கண்ணிகள்:
புல்லறி வாண்மையே ஏன் பிறந்தாயோ
பூமியில் பிறந்ததன் பயன் அடைந்தாயோ
நல்லோர்கள் சொல்வதைக் காதிற் கேளாயோ
நான் எனும் அகந்தைக்கே பிறப்பிடம் நீயோ

அறிவு கொண்டே குற்றத்தைக் கலையாத போழ்தில்
ஆடை கொண்டே உடலை மறைப்பதும் ஏனோ
அறியாத நூல்களையும் அறிந்ததாய் மேற்கொண்டால்
அறிந்ததும் ஐயமாய்ப் போகும் அன்றே

பூவாமல் காய்த்திடும் மரமுமே உள்ளதைப்
புல்லறி வாண்மை நீ உணர்ந்திலையோ
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போகும் அளவும் ஒரு நோயல்லவோ

அரிய மறை பொருளைக் காத்துக் கொள்ளாமலே
அல்லலில் சிக்கியே மடிவாயோ
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மை வையாதுலகு எனும் குறளே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22