நெஞ்சோடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.   (௲௨௱௪௰௧ - 1241)
 

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ? (௲௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? (௲௨௱௪௰௧)
—மு. வரதராசன்

நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா? (௲௨௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா? (௲௨௱௪௰௧)
—மு. கருணாநிதி

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௨ - 1242)
 

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும் (௲௨௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே! (௲௨௱௪௰௨)
—மு. வரதராசன்

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே. (௲௨௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க (௲௨௱௪௰௨)
—மு. கருணாநிதி

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.   (௲௨௱௪௰௩ - 1243)
 

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே! (௲௨௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே! (௲௨௱௪௰௩)
—மு. வரதராசன்

நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை. (௲௨௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்? (௲௨௱௪௰௩)
—மு. கருணாநிதி

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.   (௲௨௱௪௰௪ - 1244)
 

நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன (௲௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. (௲௨௱௪௰௪)
—மு. வரதராசன்

நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும். (௲௨௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன (௲௨௱௪௰௪)
—மு. கருணாநிதி

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.   (௲௨௱௪௰௫ - 1245)
 

நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ? (௲௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ? (௲௨௱௪௰௫)
—மு. வரதராசன்

நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ? (௲௨௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா? (௲௨௱௪௰௫)
—மு. கருணாநிதி

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௬ - 1246)
 

என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்! (௲௨௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய். (௲௨௱௪௰௬)
—மு. வரதராசன்

என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன். (௲௨௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே? (௲௨௱௪௰௬)
—மு. கருணாநிதி

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.   (௲௨௱௪௰௭ - 1247)
 

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது (௲௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. (௲௨௱௪௰௭)
—மு. வரதராசன்

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை. (௲௨௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது (௲௨௱௪௰௭)
—மு. கருணாநிதி

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௮ - 1248)
 

என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை! (௲௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை. (௲௨௱௪௰௮)
—மு. வரதராசன்

என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே! (௲௨௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும் (௲௨௱௪௰௮)
—மு. கருணாநிதி

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௪௰௯ - 1249)
 

என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ? (௲௨௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்? (௲௨௱௪௰௯)
—மு. வரதராசன்

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்? (௲௨௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்? (௲௨௱௪௰௯)
—மு. கருணாநிதி

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.   (௲௨௱௫௰ - 1250)
 

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும் போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே! (௲௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம். (௲௨௱௫௰)
—மு. வரதராசன்

நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம். (௲௨௱௫௰)
—சாலமன் பாப்பையா

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது (௲௨௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பேகடா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
நினைத் தொன்று சொல்லாயோ - நெஞ்சே
நினைத் தொன்று சொல்லாயோ

அநுபல்லவி:
துணை நினையன்றி யாரை நான் தேடுவேன்
துஞ்சாத நெஞ்சோடு கிளத்தலைப் பாடுவேன்

சரணம்:
ஆதரவில்லாரை ஏனோ நினைக்கின்றாய்
பேதமையால் நெஞ்சே தேடித் திகைக்கின்றாய்
காதலை விடு ஒன்றா நாணத்தை விட்டிடு
கருதும் இவ்விரண்டையும் நான் தாங்க முடியாது

கலந்துணர்த்தும் விதம் காதலர் வரக் கண்டால்
காணாமற் போவாயா வீணாக நிற்பாயா
புலந்துணராய் ஏனோ பொய்க் காய்வு காய்வது
புதுவெள்ளம் போலவர் வந்திட்டால் பாய்வது




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22