புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.   (௲௩௱௰௧ - 1311)
 

பரத்தனே! பெண் தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள் (௲௩௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். (௲௩௱௰௧)
—மு. வரதராசன்

பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன். (௲௩௱௰௧)
—சாலமன் பாப்பையா

பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன் (௲௩௱௰௧)
—மு. கருணாநிதி

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.   (௲௩௱௰௨ - 1312)
 

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்! (௲௩௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். (௲௩௱௰௨)
—மு. வரதராசன்

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்) (௲௩௱௰௨)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து (௲௩௱௰௨)
—மு. கருணாநிதி

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.   (௲௩௱௰௩ - 1313)
 

மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள் (௲௩௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். (௲௩௱௰௩)
—மு. வரதராசன்

ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள். (௲௩௱௰௩)
—சாலமன் பாப்பையா

கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள் (௲௩௱௰௩)
—மு. கருணாநிதி

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.   (௲௩௱௰௪ - 1314)
 

‘யாரினும் நின்னையே விரும்புகின்றேம்’ என்று சொன்னேன் ஆக, அவள், ‘யாரினும்? யாரினும்?’ என்று கேட்டவளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள் (௲௩௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். (௲௩௱௰௪)
—மு. வரதராசன்

காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள். (௲௩௱௰௪)
—சாலமன் பாப்பையா

``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள் (௲௩௱௰௪)
—மு. கருணாநிதி

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.   (௲௩௱௰௫ - 1315)
 

‘இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்’ என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள் (௲௩௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். (௲௩௱௰௫)
—மு. வரதராசன்

காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள். (௲௩௱௰௫)
—சாலமன் பாப்பையா

``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி (௲௩௱௰௫)
—மு. கருணாநிதி

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.   (௲௩௱௰௬ - 1316)
 

‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள் (௲௩௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். (௲௩௱௰௬)
—மு. வரதராசன்

எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள். (௲௩௱௰௬)
—சாலமன் பாப்பையா

``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள் (௲௩௱௰௬)
—மு. கருணாநிதி

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.   (௲௩௱௰௭ - 1317)
 

யாம் தும்மினேனாக ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால் (௲௩௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? (௲௩௱௰௭)
—மு. வரதராசன்

நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள். (௲௩௱௰௭)
—சாலமன் பாப்பையா

தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள் (௲௩௱௰௭)
—மு. கருணாநிதி

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.   (௲௩௱௰௮ - 1318)
 

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள் (௲௩௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். (௲௩௱௰௮)
—மு. வரதராசன்

அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள். (௲௩௱௰௮)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள் (௲௩௱௰௮)
—மு. கருணாநிதி

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.   (௲௩௱௰௯ - 1319)
 

அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள் (௲௩௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள். (௲௩௱௰௯)
—மு. வரதராசன்

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள். (௲௩௱௰௯)
—சாலமன் பாப்பையா

நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள் (௲௩௱௰௯)
—மு. கருணாநிதி

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.   (௲௩௱௨௰ - 1320)
 

அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், ‘நீர் எவரையோ மனத்திற் கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ?’ என்று கேட்டுச் சினம் கொள்வான் (௲௩௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். (௲௩௱௨௰)
—மு. வரதராசன்

என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள். (௲௩௱௨௰)
—சாலமன் பாப்பையா

ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள் (௲௩௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: வாசஸ்பதி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பாட்டுடைத் தலைவி என் பைந்தமிழ்க் காதலி
காட்டும் புலவி நுணுக்கம்
காதால் வாழ்வில் எனை அவள் வசப்படுத்தும்

அநுபல்லவி:
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்றே வெகுண்டுரைக்கும்

சரணம்:
பட்டும் படாமலும் என் பக்கத்திலே இருப்பாள்
தொட்டால் சிணுங்கிடுவாள் தோளில் முகம்கவிழ்ப்பாள்
விட்டுச் செல்வேனோ என்றென் விழிமேல் விழியை வைப்பாள்
வேண்டிப் பணிந்திட்டாலும் வித்தை எங்கே கற்றீர் என்பாள்

அச்சுப் பதுமையைப் போல் அசையாமல் வீற்றிருப்பாள்
ஆசை தீரப் பார்த்திட்டாலும் யாரை எண்ணிப் பார்த்தீர் என்பாள்
இச்சென்று தும்மினாலும் எவளோ நினைத்தாள் என்பாள்
இப்படியே எதிலும் ஊடிப் பின் கூடிக் கொள்வாள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22