தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.   (௫௱௰௧ - 511)
 

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் (௫௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். (௫௱௰௧)
—மு. வரதராசன்

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும். (௫௱௰௧)
—சாலமன் பாப்பையா

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள் (௫௱௰௧)
—மு. கருணாநிதி

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.   (௫௱௰௨ - 512)
 

செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக (௫௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். (௫௱௰௨)
—மு. வரதராசன்

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக. (௫௱௰௨)
—சாலமன் பாப்பையா

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன் (௫௱௰௨)
—மு. கருணாநிதி

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.   (௫௱௰௩ - 513)
 

அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும் (௫௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம். (௫௱௰௩)
—மு. வரதராசன்

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு. (௫௱௰௩)
—சாலமன் பாப்பையா

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம் (௫௱௰௩)
—மு. கருணாநிதி

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.   (௫௱௰௪ - 514)
 

எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர் (௫௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு. (௫௱௰௪)
—மு. வரதராசன்

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர். (௫௱௰௪)
—சாலமன் பாப்பையா

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர் (௫௱௰௪)
—மு. கருணாநிதி

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.   (௫௱௰௫ - 515)
 

செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது (௫௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது. (௫௱௰௫)
—மு. வரதராசன்

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது. (௫௱௰௫)
—சாலமன் பாப்பையா

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது (௫௱௰௫)
—மு. கருணாநிதி

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.   (௫௱௰௬ - 516)
 

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும் (௫௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும். (௫௱௰௬)
—மு. வரதராசன்

முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க. (௫௱௰௬)
—சாலமன் பாப்பையா

செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும் (௫௱௰௬)
—மு. கருணாநிதி

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.   (௫௱௰௭ - 517)
 

இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும் (௫௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். (௫௱௰௭)
—மு. வரதராசன்

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக. (௫௱௰௭)
—சாலமன் பாப்பையா

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் (௫௱௰௭)
—மு. கருணாநிதி

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.   (௫௱௰௮ - 518)
 

இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும் (௫௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும். (௫௱௰௮)
—மு. வரதராசன்

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக. (௫௱௰௮)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும் (௫௱௰௮)
—மு. கருணாநிதி

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.   (௫௱௰௯ - 519)
 

எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும் (௫௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும். (௫௱௰௯)
—மு. வரதராசன்

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான். (௫௱௰௯)
—சாலமன் பாப்பையா

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும் (௫௱௰௯)
—மு. கருணாநிதி

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.   (௫௱௨௰ - 520)
 

தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக (௫௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும். (௫௱௨௰)
—மு. வரதராசன்

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (௫௱௨௰)
—சாலமன் பாப்பையா

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும் (௫௱௨௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தேசு  |  தாளம்: ரூபகம்
கண்ணிகள்:
தெரிந்து வினையாடல் - கற்றுத்
தேர்ந்த வனைக் கூடல்
புரிந்து சமுதாயம் - என்றும்
போற்றத் தகும் நேயம்.

தலைவனிடத்தில் அன்பும் - மிகத்
தன்னறிவும் தெளிவும்
அலைக்கும் அவா வின்மையும் - வினை
யாளன் பெறுங் குணமாம்.

கால நிலை நாடும் - தன்
கடமையில் கண்ணோடும்
சீலமுள்ளோன் உரிமை - பெறச்
செய்யின் மிகும் திறமை.

பண்பை மாற்றும் பதவி - பெரும்
பழிசெய்யவும் உதவி
என்பதையும் நினைக்க - மனம்
என்றும் கோணா திருக்க

நன்மை தீமை யறிந்தும் - அவை
நாடி நலம் புரிந்தும்
தன்மையா னாளப் படும் - சீர்
தங்கும் திருக்குறளே.




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22