அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.   (௨௱௪௰௧ - 241)
 

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே! (௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். (௨௱௪௰௧)
—மு. வரதராசன்

செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. (௨௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது (௨௱௪௰௧)
—மு. கருணாநிதி

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.   (௨௱௪௰௨ - 242)
 

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க; பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் (௨௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். (௨௱௪௰௨)
—மு. வரதராசன்

நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும். (௨௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும் (௨௱௪௰௨)
—மு. கருணாநிதி

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.   (௨௱௪௰௩ - 243)
 

இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும் (௨௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. (௨௱௪௰௩)
—மு. வரதராசன்

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை. (௨௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார் (௨௱௪௰௩)
—மு. கருணாநிதி

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.   (௨௱௪௰௪ - 244)
 

நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை! (௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. (௨௱௪௰௪)
—மு. வரதராசன்

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. (௨௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள் (௨௱௪௰௪)
—மு. கருணாநிதி

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.   (௨௱௪௰௫ - 245)
 

அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று (௨௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். (௨௱௪௰௫)
—மு. வரதராசன்

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. (௨௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று (௨௱௪௰௫)
—மு. கருணாநிதி

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.   (௨௱௪௰௬ - 246)
 

அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர் (௨௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். (௨௱௪௰௬)
—மு. வரதராசன்

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர். (௨௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர் (௨௱௪௰௬)
—மு. கருணாநிதி

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (௨௱௪௰௭ - 247)
 

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும் (௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். (௨௱௪௰௭)
—மு. வரதராசன்

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. (௨௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது (௨௱௪௰௭)
—மு. கருணாநிதி

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.   (௨௱௪௰௮ - 248)
 

பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள் (௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. (௨௱௪௰௮)
—மு. வரதராசன்

பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். (௨௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது (௨௱௪௰௮)
—மு. கருணாநிதி

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   (௨௱௪௰௯ - 249)
 

அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே! (௨௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. (௨௱௪௰௯)
—மு. வரதராசன்

மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும். (௨௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும் (௨௱௪௰௯)
—மு. கருணாநிதி

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.   (௨௱௫௰ - 250)
 

தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும் (௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். (௨௱௫௰)
—மு. வரதராசன்

அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. (௨௱௫௰)
—சாலமன் பாப்பையா

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது (௨௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கமாஸ்  |  தாளம்: ஆதி
பல்லவி:
அருளாளர் இவர்தானம்மா - தூய
அன்பென்னும் அன்னை தந்த
அறத்துப்பாலில் வளர்ந்த

அநுபல்லவி:
குறளார்வம் நம் நெஞ்சில்
குடிகொள்ளவே செய்யும்
கொண்டல் செந்தமிழ் தந்த
தென்றல் எனப் புகழ்நல்

சரணம்:
இருள்சேர்ந்த இன்னாத உலகில் புகாதவிதம்
என்னாளும் எவ்வுயிர்க்கும் இதம்பலவே புரியும்
அருள்சேர்ந்த நெஞ்சினர் ஆக நமக்குதவும்
அண்ணல் அவர் மொழி கன்னல்
அகம் ஒளிரும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22